சுவிசில் மனித சங்கிலிப் போராட்டம் – ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்புசுவிற்சர்லாந்து சூரிச் நகரில் 28-03-09 அன்று சனிக்கிழமை இடம்பெற்ற மனித சங்கிலிப் பேராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர். தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசின் இனப்படுகொலையை உடனயாக தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து சுவிற்சர்லாந்தில் முதன்முறையாக மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்பட்டது.சூரிச் பிரதான தொடரூந்து நிலையத்திற்கு முன்பாக மக்கள் அதிகம் பயணிக்கும் வீதியில் மனித சங்கிலியாக நின்ற மக்கள் கவனயீர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்
சிறீலங்கா போரை நிறுத்து..
தமிழர்களைக் கொல்லாதே..
எமக்கு வேண்டும் தமிழீழம்..
எங்கள் தலைவர் பிரபாகரன்..போன்ற முழக்கங்கள் தமிழ், டொச், ஆங்கிலம் போன்ற மொழிகளில் எழுப்பிய தமிழ் மக்கள், தமிழனப் படுகொலையை சித்தரிக்கும் பதாகைகள், மற்றும் நிழற்படங்களையும் தாங்கியிருந்தனர்.
மாலை 3:30 மணிக்கு ஆரம்பித்த மனித சங்கிலிப் போராட்டத்தில் கொட்டும் மழை, மற்றும் கடும் குளிரின் மத்தியிலும் சிறியோர் முதல் மூதாளர்கள்வரை ஓர்மத்துடன் கலந்துகொண்டனர்.
இரண்டரை மணித்தியாலங்கள் வீதியில் நடைபெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தின்போது, சில இளைஞர்கள் தமது ஊர்திகளில் தமிழீழத் தேசியக் கொடியுடன் சுற்றிவந்து கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.
மிக நேர்த்தியாக ஒழுங்கமைப்பட்ட போராட்டத்தை அவதானித்த காவல்துறையினர், மனித சங்கிலிப் போராட்டத்தைத் தொடர்ந்து அருகில் இருந்த ஊர்தித் தரிப்பிட வெளியிடத்தில் சிறிய அளவிலான கண்டனக் கூட்டத்தை நடத்துவதற்கும் உடன் அனுமதி வழங்கியிருந்தனர் வன்னியில் நாளாந்தம் தமிழ் மக்கள் சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டுவரும் நிலையில், தமிழ் மக்கள் மீதான அரசின் இனப்படுகொலையை உலகுக்கு எடுத்துரைக்க புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அணி திரண்டு வருவதாக நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்தனர்