வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவிஸ் பாராளுமன்ற சதுக்கத்தின் முன்னால் 30-03-09 அன்று சுவிற்சர்லாந்தின் அனைத்து பாகங்களிலும் இருந்து வருகை தந்த தமிழ் மக்கள், புனிதம் நிறைந்த அன்றைய நாளில் சுவிஸ் அரசாங்கத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைத்து "இன்றில்லையேல் என்றுமில்லை" என்கின்ற கோசம் தாங்கி உரிமைக் குரலாய் ஒன்று கூடினர்.
சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சுவிஸ் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமாகவும் சுவிஸ் தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று அதன் இணை அமைப்புக்களும் ஒன்றுகூடி முன்னெடுத்த இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் பேரவையின் ஆலோசகர் வன்னித்தம்பி தங்கரத்தினம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதினை தொடர்ந்து இந்த நிகழ்வில் சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சர்வதேச தொண்டுநிறுவன பிரதிநிதிகள் என பலர் உரையாற்றி இருந்தனர்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அங்கீகரிக்கக் கோரியும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கெதிராக குரல் எழுப்பி சிறிலங்கா அரசை உடனடியான யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு அழுத்தம் கொடுக்கக் கோரியும் வன்னி மக்களின் உடனடித் தேவையான உணவு மருந்து என்பவற்றை அம்மக்களுக்குச் சென்றடைவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சுவிஸ் அரசை வலியுறுத்தி இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.