வன்னியில் இடம்பெயர்ந்து அல்லலுறும் அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு பூரண அனுமதியளிக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளெக் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும், அவர்களுக்கு போதியளவு உதவிகளை வழங்க சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த முன்நகர்வுகளின் காரணமாக சிவிலியன்கள் எதிர்நோக்கி வரும் மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்ட திட்டங்;களை மதித்து செயற்பட வேண்டியது மோதல்களில் ஈடுபட்டு வரும் சகல தரப்பினரதும் தார்மீக பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களை சுதந்திரமான இடம் நகர அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தவில்லை என பிளெக் தெரிவித்துள்ளார்.
எனினும், மூன்று தசாப்த காலமாக நீடித்து வரும் இலங்கையின் தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டத்தின் மூலமே நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களின் நியாமான அபிலாஷைகளுக்கு மதிப்பளிக்கப்படக் கூடிய ஓர் அதிகாரப் பகிர்வுத் திட்டமொன்றே தற்போதைய தேவையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்