விருந்தாளி விமர்சனம்
மனசை நனைய வைக்கும் மழையில் தொடங்குகிறது முதல் காட்சி. படத்தின் இயக்குனர் பெயரும் 'வாட்டர்'மேன்! என்ன ஒரு ஒற்றுமை என்று வியந்தபடியே காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தால், அடுத்தடுத்த காட்சிகளில் மழைக்கு சிக்கிய எறும்பாகிறோம். மூச்சு முட்ட வைக்கிறது முக்கால்வாசி படம். ஆறுதல் அளிக்கிற அம்சங்களை குரல் விட்டு எண்ணிவிடலாம்!
வயசான போஸ்ட்மேன். வாளிப்பான மகள். அவளை காதலிக்கும் வட்டி தொழில் செய்யும் ஹீரோ என்று மார்கழி மாச கோலத்திற்கு நிகரான அழகுடன் துவங்குகிறது கதை. அதிலும் 'கடிதமே கடிதமே...' என்ற அழகான வார்த்தைகள் கோர்த்த பாடல் பின்னணியில் கடிதங்களை டெலிவரி செய்யும் பாலாசிங்கின் சைக்கிள் பயணம் ஒரு கனமான கதைக்கு நம்மை தயார் படுத்துகிறது. ஆனால்...?
ஹீரோயின் தியானா ஏறி வருகிற ஆட்டோவை வட்டி பணத்திற்காக பறிமுதல் செய்யும் ஹீரோ ஈஸ்வர், பின்பு அதே ஹீரோயினியிடம் காதல் வயப்படுகிற காட்சிகள் எல்லாம் சுவாரஸ்யத்தை அள்ளி தருகிறது. அவள் தந்த பூச்செடியை வளர வைப்பதற்காக அதனிடமே ஈஸ்வர் கெஞ்சுவதும் அழகு. (பின்பு அந்த பூச்செடி வளர்வதையோ, கருகுவதையோ ஒரு ஷாட்டிலாவது காட்ட வேண்டாமோ?) யாருக்கோ வருகிற மணியார்டர் பணத்தை தவறவிட்டு பரிதவிக்கிற தியானாவிடம், இந்தாங்க நீங்க மறந்து வச்சுட்டு போன பணம் என்று ஈஸ்வர் கைகொடுப்பதும், பின்பு தியானாவுக்கு உண்மை தெரிவதும் காதல் சாக்லெட்டுகள். இந்த காதலுக்கு இயக்குனர் சமாதி கட்ட நினைக்கும்போதுதான் திரைக்கதையில் பெரிய பள்ளம்.
ஆர்னால்டு உடம்பும், அசர வைக்கும் நடிப்புமாக மிரட்டியிருக்கிறார் அறிமுக ஹீரோ ஈஸ்வர். நல்ல படங்களாக அமைந்தால் நாளைய நாற்காலி ரெடி!
அந்தகால ரேவதி போலிருக்கிறார் புதுமுகம் தியானா. நடிப்பிலும் சுட்டி ப்ளஸ் கெட்டி. கண்ணுக்கு எதிரே ஒரு கொலை நடப்பதை கண்டு அஞ்சி ஒடுங்குவதும், அவரது முடிவும் ரசிகர்களின் கர்சீப்பை நிச்சயம் நனைக்கும்!
'ராவான' விருந்தாளி கதையை தானே திருத்தி மெருகேற்றியதாக ஒரு முறை பிரஸ்மீட்டில் சொல்லியிருந்தார் சிங்கம்புலி. (உங்க டக்கு இதுதானா சிங்கம்) படம் நெடுக பேசிக் கொண்டேயிருக்கிற சிங்கம்புலி ஒரு காட்சியிலாவது நம்மை குலுக்க வேண்டுமே! உஸ்....
நாலே காட்சிகளில் வந்தாலும் நாசர் ஜம். இடைச்செருகலாக இருந்தாலும், ஸ்கூல் பையன் சங்கர் தனது பரிவாரங்களுடன் தியானாவை சைட் அடிக்கிற சாதுர்யங்கள் கலகலப்பு.
எல்லா படங்களிலும் வரும் வில்லத்தன இன்ஸ்பெக்டராக சேரன்ராஜ். தியானாவை ஒரு தினுசாக இவர் பார்க்கும்போதெல்லாம் பக்கென்று இருக்கிறது. கடைசியில் அவர் கையாலேயே கன்னத்தில்... ஹ்ம்ம் பெரிய கன்னம். பெரிய சத்தம்.
ஆறுதல் தருகிற இருவர் இசையமைப்பாளர் எஸ்எஸ்குமரனும், ஒளிப்பதிவாளர் சஜனும்!
இலை விருந்து. இட்லிதான் அரைவேக்காடு!