வீரகேசரி நாளேடு - திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம குருக்களான சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மாவுக்கு மரணதண்டனை விதித்து திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக பணியாற்றிய காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மனைவியான அம்பிகா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபாத சுந்தரம்பிள்ளை குகேஸ்வரியை நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு கொலை செய்து அவரின் சடலத்தினை ஆலய பிரதேசத்தில் தான் வசித்து வந்த விடுதி வளவுக்குள் புதைத்ததாக சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மா மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் திருமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவிலேயே நேற்று இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொலை குறித்து எதிரியான சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மாவுக்கு ஆலய பூசைகளில் உதவியாளராக பணியாற்றிய வெங்கட்ராமன் பாலமுரளி சர்மா ஒரு வருடத்தின் பின் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி திருமலை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார். இதனையடுத்து ஆலய பிரதேசத்துக்கு சென்ற பொலிஸார் எதிரி வசித்து வந்த விடுதி வளவில் புதைக்கப்பட்டிருந்த அம்பிகாவின் எலும்புக் கூட்டை கைப்பற்றியிருந்தனர். மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிரியும் முக்கிய சாட்சியான பாலமுரளி சர்மாவும் தலைமறைவாகியிருந்தனர். இவர்களுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்காக எதிரி விமான நிலையம் சென்றபோது கைது செய்யப்பட்டார். முக்கிய சாட்சியான பால முரளி சர்மாவும் சரணடைந்திருந்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை திருமலை நீதிமன்றில் இடம்பெற்றது. அரச தரப்பில் சட்டவாதி செல்வி சுகந்தி கந்தசாமியும் எதிரியின் சார்பில் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தாவும் ஆஜராகியிருந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணை முடிவடைந்திருந்தது. நேற்று நீதிபதி எம். இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கினார்.
தனது தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் கூறியதாவது :
"கொலை தொடர்பில் 14.4.1997 அன்று கோணேஸ்வர கோயிலின் பிரதம குருக்களான சிவ கடாட்ச விசாகேஸ்வர சர்மாவின் உதவிக் குருக்கள் பாலமுரளி சர்மா தாமாகவே பொலிஸாருக்கு சென்று அறிவித்ததையடுத்து தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.
பாலமுரளியின் வாக்கு மூலமும் அவர் புதை குழியைக் காட்டியதும் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதும் நீதிமன்றுக்கு சாட்சியாக அமைந்தது. குறிக்கப்பட்ட எதிரி பிராமணக் குல குருக்கள், அவர் நாயன்மார்களால் பாடப்பெற்ற திருத்தலமான திருகோணேஸ்வர பிரதம குருக்களாக இருந்த சமயம் இக் கொலை இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட அம்பிகாவின் சடலம் புண்ணிய தலமான கோயில் வளாகத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. அவரின் சடலத்தைப் புதைத்து விட்டு இரண்டு மாதகாலமாக அதே கோணேஸ்வர ஆலயத்தில் ஈஸ்வரனுக்கும் மாதுமைக்கும் இரத்தக் கறை படிந்த கரங்களால் பூஜைகள் செய்து மக்களுக்கு அர்ச்சனை வழங்கியதன் விளைவாக கோயிலின் புனிதத் தன்மை எதிரியினால் கெடுக்கப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்ட சடலத்தின் புதைகுழியிலிருந்து கைப்பற்றப்பட்ட கழுத்து நெரிக்கப்பட்டமைக்கான கயிறு, தாலிக் கொடி, தலை மயிர், மண்டை ஓடு என்பன சாட்சிகளாக அமைகின்றன.
அத்துடன் எதிரியினால் அம்பிகா புதைக்கப்பட்ட இடம் மான் இறந்து புதைக்கப்பட்ட இடமாகும். இதன் மூலம் எதிரி ஏமாற்று செய்யும் நோக்குடன் நடந்துள்ளார்.
கோணேஸ்வரர் பெருமாளின் அருள் பெற வந்த மக்களுக்கு இரத்தக் கறை படிந்த கரங்களால் அர்ச்சனை செய்துள்ளார். மாமன்னன் இராவணனால் பூசிக்கப்பட்ட ஆலயத்தின் புனிதத் தன்மை எதிரியால் கெடுக்கப்பட்டுள்ளது.
எதிரி இக்கொலையைத் திட்டமிட்டுச் செய்தபோது இருவரதும் சத்தத்துக்கும் இடையில் தூக்கத்திலிருந்த 1 வயதுக் குழந்தை எழுந்துள்ளது. அக்குழந்தை முன்னால் இக்கொலை இடம்பெற்றுள்ளது.
புதை குழியைத் தோண்டியமை, சடலத்தைப் புதைத்தமை முதலான குற்றங்களின் பிரகாரம் எதிரி கொலையாளி என்பது நிரூபணமாகிறது. எனவே எதிரிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன்." இவ்வாறு நீதிபதி கூறினார்.