வம்சம் - விமர்சனம்
சாண்டில்யன் கதையை ராஜேஷ்குமார் புரூஃப் பார்த்த மாதிரி கலவையான பிரசன்டேஷன். படத்தில் வரும் வம்சங்களின் பெயர்களை மனப்பாடமாக சொல்லிவிட்டால் ஒரு மெடலே தரலாம். அந்தளவுக்கு அகழ்வாராய்ச்சி நடத்தியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். உதாரணத்திற்கு ஹீரோவுடைய வம்சத்தின் பெயர், 'எப்பாடு பட்டாவது பிற்பாடு கொடாதவர்!' (அட ஊரின் பெயர்களில் கூட குளம்படி சத்தம்யா...)
ஊருக்குள் குடியிருந்தால் மற்றவர்களை போல மகனும் சண்டை சச்சரவுகளில் இறங்கிவிடுவானோ என்று ஊருக்கு ஒதுக்குபுறத்தில் வாழ்கிறார் ஹீரோ அருள்நிதியின் அம்மா. அப்படியிருந்தும் வலிய வந்து சேர்கிறது சண்டை. முடிந்தவரை புஜத்தை சிலுப்பாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறார் அருள்நிதி. அப்படியும் பொறுக்கமுடியாத ஒரு கட்டத்தில் முஷ்டியை உயர்த்த, ரணகளமாகிறது ஊர். ஒருவரையொருவர் போட்டுத்தள்ளுவது என்று கத்தாழை தூக்க, (கத்தியை விட கூர்மையா இருக்குப்பா இந்த தாவராயுதம்!) யார் செத்தார்கள், யார் வாழ்ந்தார்கள் என்பது சொல்லியா தெரிய வேண்டும்?
ஒரு இனத்தின் பெருமையை சொல்ல கொடையும், வீரமும் மட்டுமே இங்கு பிரதானமாக இருக்கிறது. ஒழுக்கம் ஐந்தாவது ஆறாவது பட்சம்தான். (உங்கப்பாவுக்கு சாராயம்னா உசிரு என்று அம்மாவே பிளாஷ்பேக்கில் பெருமையடித்துக் கொள்கிறார்) இப்படி எடுத்துக் கொண்ட பின்னணியை அட்சர சுத்தமாக சொல்லியிருக்கிறார் பாண்டிராஜ். காதல் காட்சிகளில் தனது பாணியை விட்டுக் கொடுக்காமல் ரசனை பூசியிருப்பது அழகோ அழகு.
ஆசையாக வளர்த்த பசுவை அண்டை கிராமத்திற்கு விற்க, அதுவோ பிறந்த இடம் தேடி அவ்வப்போது திரும்ப ஓடி வருகிறது. ஒப்படைக்கப் போகிற நேரத்தில் மாட்டுக்கு சொந்தக்காரி சுனைனா மீது காதலே வந்துவிடுகிறது அருள்நிதிக்கு. அப்புறம் என்ன? இவரே பசுமாட்டை களவாடி திரும்ப திரும்ப ஒப்படைக்கப் போகிறார். 'உங்க லவ்வுக்கு நானா மாட்டினேன்' என்று பசுவே சீறுகிற அளவுக்கு செம ஜாலி பண்ணுகிறார்கள். அது போகட்டும், செல்போன் சிக்னல் கிடைக்க அந்த கிராமம் மொத்தமும் மரத்தின் உச்சியில் ஏறி ஹலோ சொல்வதெல்லாம் செல்போன் டவரே சுளுக்கிக் கொள்கிற அளவுக்கு சிரிப்போற்சவம்!
அறிமுக நாயகன் அருள்நிதிக்கு பட்டுக்கம்பள வரவேற்பே தரலாம். ஆறடி உயரம், அள்ளிக் கொள்ளும் சிரிப்பு என்று முதல் பார்வையிலேயே கவர்ந்துவிடுகிறார். மலரு... மலரு... என்று சுனைனாவை பூனைக்குட்டியாக சுற்றி வருவதும், அதே மலரிடம் 'நாம சேர்ந்தா அவரு என்னை கொன்னுடுவாரு' என்று விலகல் விண்ணப்பம் போடுவதும் ரசனை. கோடம்பாக்க விடாப்பிடி காதல் நாயகர்களே, கொஞ்சம் விலகுங்கள். அருள்நிதி வந்துட்டாரு!
சுனைனாவின் கேரக்டரை ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். நட்ட நடுரோட்டில் ஊர் பெரிய மனுஷனை சாணியை கரைத்து முகத்தில் ஊற்றியதோடல்லாமல் விளக்குமாற்றாலும் அடி கொடுப்பது திடுக் திருப்பம். அடுத்த காட்சியிலேயே இது ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட புலி என்பது தெரியாமல் வருங்கால மாமியார், அடக்கமான பொண்ணு என்ற பாராட்டுவதும், அதை ஒன்றுமே தெரியாதது போல சுனைனா ஏற்றுக் கொள்வதும் அவ்வளவு திகில் நேரத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது. எதிரிகளுக்கு பயந்து ஓடப் பிடிக்காமல் சரக்கென்று இடுப்பிலிருந்து சைக்கிள் செயினை உருவுகிறாரே, அந்த 'மலர்' முகத்தில் சுளீர் வெப்பம்! தன்னை வேண்டாம் என்று விலகிப்போகிற அருள்நிதிக்கே 'உன்னை போட்டுத்தள்ளிடுவேன்' என்று போன் மிரட்டல் விடும் சுனைனாவின் வீரத்திற்கு ரசிகர்களின் திருச்சபையே அடிமை!
'கவருமென்ட்டு ஆபிசருக்கு ஒரு கொடலு கறி போடு' என்று சதாய்ப்பாக உதார் விடுகிற கஞ்சா கருப்பு காட்சிக்கு காட்சி அதிர வைத்திருக்கிறார். நண்பன் அருள்நிதிக்கு சுனைனா கிடைக்கிற அதே நேரத்தில், இவருக்கும் ஒரு கருப்பாயி கிடைப்பதும், கூடவே ஒரு த்ரிஷா கிடைப்பதும் செம சுவாரஸ்யம்.
நரைத்த முறுக்கு மீசையில் நஞ்சை தடவிய மாதிரி ஜெயப்பிரகாஷின் கேரக்டரில் அத்தனை கொடூரம். (இவரது வம்சத்தின் பெயர் நஞ்சுண்ட மாவோசியாம்) ஒரு மில்லி மீட்டர் சிரிப்பில் ஒரு நூறு பி.எஸ்.வீரப்பாக்களை திரையில் உலவ விடுகிறார் மனுஷன். கத்தியோ, கம்பையோ தூக்காமல் இவர் செய்யும் வில்லத்தனத்திற்கு ஏழெட்டு ஆயுள், நாலைந்து தூக்குகள் கூட கம்மிதான். இனிமேல் வில்லன்களுக்கு அண்டை மாநிலத்தில் வலை வீசுகிறவர்கள் ஜெயப்பிரகாஷின் விலாசத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டால் அலைச்சல் மிச்சம்!
கிஷோரின் பிளாஷ்பேக்குக்கு அவ்வளவு நீளம் தேவை இல்லையோ? ம்க்கும், அது மட்டுமா நீளம். அவ்வளவு பட்டாசு சத்தத்திலும் கொட்டாவி விட வைக்கும் அந்த தொடர் திருவிழாவும்தான்! திருவிழா நேரத்தில் பிணம் விழுந்தால் அதற்கு ஒரு மாலை கூட விழாது என்பது போன்ற இறுதி மரியாதை செய்திகள் புதுசு என்பதால் பொருத்தருளலாம்.
இப்படியொரு படத்திற்கு எப்படி இருந்திருக்க வேண்டும் இசை? ஹ்ம்ம்ம்ம்... மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு பிரமிப்பு.
இந்த கதைக்காக ஏராளமான செய்திகளை திரட்டியிருக்கிறார் பாண்டிராஜ். அவை எல்லாவற்றையும் ஒரே படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
தலையணைக்குள் மெத்தையை திணித்தால் என்னாகும்? அதுதான் நடந்திருக்கிறது வம்சத்திலும்!