இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்து இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருப்பதை விடுதலைப் புலிகள் இயக்கம் வரவேற்றுள்ளது.
வன்னியில் பாதுகாப்பு வலயத்தின் மீது வரலாறு காணாத அளவிற்கு இன்று கொடூரமான தாக்குதல் நடத்தி 1500 அப்பாவித் தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்துள்ள நிலையில், இராணுவத்தின் மூலம் தீர்வு கண்டிட இலங்கை அரசு முயற்சித்தால் இலங்கையில் என்றைக்கும் அமைதி ஏற்படாது என்று விடுதலைப் புலிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
அப்பாவி மக்களை பாதுகாப்பு வலயப் பகுதிக்கு வருமாறு அழைத்துவிட்டு, அங்கு வந்து அடைக்கலம் புகுந்தவர்கள் மீது ஒவ்வொரு நாளும் பெரும் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கில் தமிழர்களை இலங்கை படையினர் கொன்று குவித்துவரும் நிலையில், உலக நாடுகள் பலவும் வெறும் குற்றச்சாற்றுகளை கூறிவிட்டு அமைதி காக்கும் வேளையில், போரை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தையை துவக்குமாறு இலங்கை அரசிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதை வரவேற்கிறோம்.
தமிழர்களை புறக்கணித்தும், சம வாய்ப்புகளை மறுத்தும், இன ரீதியாக அவர்களுக்கு அநீதி இழைத்தும் வந்த சிங்கள இனவாத இலங்கை அரசுகளின் நடவடிக்கையே அங்கு நடக்கும் விடுதலைப் போராட்டத்திற்குக் காரணம். தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கோரி போராடி வரும் அந்த சமூகத்தின் மீது இலங்கை அரசு நடத்திவரும் தாக்குதலால் கொல்லப்பட்ட எண்ணிலடங்கா உறவுகளால் அதற்கு உண்டான ஆழமான ரணம் என்றென்றும் மறையாது. இலங்கை அரசு கூறிவருவதைப் போல இராணுவ நடவடிக்கையின் மூலம் இப்பிரச்சனையை முடித்துவிட முடியாது” என்று விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவும் சர்வதேச சமூகமும் வற்புறுத்தியதற்கு இணங்க நிபந்தனையற்ற போர் நிறுத்தத்திற்கு தயார் என்றும், தமிழர்களின் மனிதாபிமான பிரச்சனைகள், பாதுகாப்பு, தங்களின் வாழ்விடத்திற்கு அவர்கள் மீண்டும் இடம்பெயர்தல் என்பன உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், இராணுவ ரீதியாக தமிழர்களை ஒடுக்கி விடலாம் என்று இலங்கை அரசு நினைத்தால் அதனால் ஒருநாளும் அமைதியாக வாழ முடியாது என்று எச்சரித்துள்ளது.
எந்தவிதமான முன் நிபந்தனை விதிக்கும் நிலையிலும் நாங்கள் இல்லை என்று இலங்கை அரசு கூறிவருவதை கருத்தில் கொண்டுள்ளோம். அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகளால் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டது மட்டுமின்றி, அவர்களின் பிரச்சனைகளுக்கு அரசமைப்பு ரீதியான தீர்வு காணாமல் இராணுவ நடவடிக்கையில் கவனம் செலுத்தின. தற்பொழுது ஒவ்வொரு நாளும் எறிகணை வீசியும், பீரங்கிளால் சுட்டும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கருவிலிருக்கும் குழைந்தைகள் என்று கொன்று வருகிறது சிறிலங்க அரசு. இதனை சர்வதேச சமூகம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்படிபட்ட நிலையில் விடுதலைக்கான போராட்டத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் தொடரும். அதன் வழிமுறைகள் மாறலாம், ஆனால் இராணுவ வெற்றியின் மூலம் தமிழர்களின் உரிமை போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என்று சிறிலங்க அரசு நினைத்தால் இலங்கையில் ஒருபோதும் அமைதி நிலவாது என்று கூறியுள்ளனர்.
இந்த அறிக்கையை விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமையகம் வெளியிட்டுள்ளது